அன்பு ஒரு முகம் வரைய படாத பாடுபட்டுக்கொண்டிருந்தான். முகத்துக்கான வட்டமே சரியாக வரவில்லை. அப்புறம் எப்படி கண்,காது,மூக்கு,வாய் போடுவது?
ஒரு வெள்ளைப் பேப்பரில் முகம் ஒன்று வரைஞ்சுட்டு வாங்கன்னு ஆசிரியர்
சொல்லி ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆச்சு. மற்ற மாணவர்களும் அன்பைப்
போல முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க. மத்த மாணவர்கள் கண்,காது,மூக்குன்னு வரைஞ்சுட்டாங்க.
ஆனா, அன்புக்குத்தான் முகத்தை வரைய வட்டமே ஒழுங்கா வரமாட்டேங்குது. நாலைந்து வெள்ளைத்தாள்கள் இரப்பரில் அழிச்சு அழிச்சே வெள்ளை நிறம் போய் கருப்பு நிறமாகி கசக்கி எறிஞ்சாச்சு; ஐந்தாவது வெள்ளைத்தாளில் இப்போது முயற்சி பண்ணுகிறான்.
பென்சிலை இலாவகமாப் பிடிச்சு இந்தத் தடவை முகத்துக்கான வட்டத்தைப்
போட்டுடனும் என்று சொல்லிக்கொண்டான். ஆச்சு....அரை வட்டம் ஓரளவு
வந்துருச்சு. கீழ்பக்கமா இழுக்கும் போது.....கோணிக்கொண்டு போய்விட்டது.
அவனுக்கு அலுப்பா இருந்துச்சு; மீண்டும் அழிச்சு,வரைஞ்சு இப்படியும்
அப்படியும் திருப்பிப் பார்த்தான்,அன்பு. முகத்துக்கான வட்டமா இல்லையே.
என்ன பண்ணலாம்? கொஞ்ச நேரம் பக்கத்திலிருந்தவன் எப்படி வரைஞ்சுகிட்டு
இருக்கான்னு பார்த்தான்.
"இன்னும் கொஞ்ச நேரத்துல மதியச் சாப்பாட்டுக்கு மணி அடிச்சுருவாங்க,
இன்னும் நீங்க படம் போட்டுக்கொண்டாரலை.."என்று ஆசிரியர் சொல்ல
ஆரம்பிக்க சிலர் நாங்க முடிச்சுட்டோம், சார் என்று குரல்கள் ஒலித்தது.
அன்பு, மறுபடியும் வரைவதற்கு தயார் ஆனான். கீழ் பக்கம் கோடு இழுத்தபோது மறுபடி கோணலாய்ப் போனது. அந்த இடத்தை மட்டும் அழித்துவிட்டு கோடு போட்டுப் பார்த்தான்.
"சரி, இனிமே வரைய முடியாது. இன்னும் கொஞ்ச நேரத்துல மணியடிக்கப்
போகுது. மதியம் சாப்பிட்டு வந்துட்டுத்தான் போட்டுப்பாக்கனும்,"என்று
முடிவு செய்து கொண்டான்,அன்பு.
வரைந்த தாளை ஒரு நோட்டில் வைத்து மூடியபோதுதான் அந்தக் குரல்
நோட்டிலிருந்து வந்தது.
"ஏம்ப்பா, அன்பு உன்னைத்தான்....என்னை இப்படியே அரையும் குறையுமா
விட்டுட்டு போறியே. போறதுதான் போற..எனக்கு பாக்குற மாதிரி
ரெண்டு கண்ணையாவது போட்டுட்டுப் போ," என்று அந்தக் கண்
இல்லாத ஓவியம் கேட்டது.
"ஓவியம் பேசுமா?" அன்புக்கு ஆச்சரியமாக இருந்தது.
"ஆமா, நான் தான் பேசுறேன். எனக்கு கண்ணையாவது குடுத்தா
நான் பாக்கவாவது முடியும்,"என்றது அந்தப் படம்.
உடனே அன்பு பென்சிலை எடுத்து கண்கள் இருக்க வேண்டிய
இடத்தில் ரெண்டு புள்ளியை அழுத்தி வைத்தான்.
"ம்ம்ம்ம்...இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி நல்லாத்தான் போடேன்,"
என்று சொன்னது படம்.
புள்ளியை சிறிது பெரிது படுத்தினான்;மேலே புருவம் போல
கோடிழுத்தான்.
"நான் வாயில்லாமலே உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். வாயையும்
போடேன்,"படம் விடாமல் மேலும் சொன்னது.
அன்புவுக்கே உற்சாகம் வந்துவிட்டது.
"வாய்...இப்படித்தானே...!?" அன்பு இப்போது சகஜமாக ஓவியத்திடம்
பேச ஆரம்பித்துவிட்டான். ஓவியமும் இப்படிபோடு, அப்படி கோடு
இழு. அதைக் கொஞ்சம் வளைத்துப் போடு. ஒரு சுழி சுழித்துவிடு
என்று சொல்லச் சொல்ல இவனும் முகத்தை பூர்த்தி பண்ணிவிட்டான்.
முகத்தை பூர்த்தி செய்யவும் மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
"என்ன, எப்படி வரைஞ்சு இருக்கேன். உனக்கு பிடிச்சிருக்கா?"அன்பு கேட்டான்.
"நல்லா வரைஞ்சுட்டேன்னு சொல்லமுடியாது. பரவாயில்லை. முதலில்
முகத்துக்காக என் மூஞ்சியை அசிங்கமா வரைஞ்சதுக்கு இப்ப எவ்வளவோ
ப்ரவாயில்லை.
நான் இங்கேயே இருப்பேன். நீ வீட்டுக்கு போய் சாப்பிட்டுவிட்டு
இங்க வா. இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணி என் முகத்தை நீ அழகா
போட்டிடலாம், சரியா?" என்றது ஓவியம்.
"ரெம்ப நன்றி. அப்படிப் போடு;இப்படி கோடு இழுன்னு சொன்னீங்க;நீங்க சொல்லலைன்னா அந்த வட்டத்திலேயேதான் இருந்திருப்பேன். சீக்கிரம் வந்துவிடுவேன்,"என்று சொல்லிக் கிளம்பினான்.
வீட்டில் அம்மா என்ன சாப்பாடு போட்டாலும், பிடிக்கலை போ
என்று சொல்லி அடம் பிடிப்பான். இன்று அம்மா தட்டில் போட்டதைச்
சாப்பிட்டான்;தட்டைக் காலிசெய்தான். கையைக் கழுவியதுதான்
தெரியும் பள்ளிக்கூடத்தில் வந்துதான் நின்றான்.
நோட்டைத் திறந்து ஓவியத்தை எடுத்தான்.
"யாரும் வரலை; அதுக்குள்ள சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டாயா?"என்றது
ஓவியம்.
"ஆமா! நீ இருப்பியோ,போயிருவியோன்னு வேகமா வந்துட்டேன்.
சரி இப்பச் சொல்லு. எதையெல்லாம் அழிச்சுட்டுப் போட்டா
முகம் பாக்க நல்லா இருக்கும். நீ சொல்ற. நான் போடுறேன், சரியா," என்றான்
அன்பு.
"அங்க ஒரு பையன் நிக்கிறான் பாரு. அவன் கண்ணைப் பாரு. நீ புருவத்துக்கு
ஒரு கோடு போட்டிருக்கே. அது கொஞ்சம் வளைவா அந்த முடியெல்லாம் இருந்தா இன்னும் நல்லா இருக்கும். அந்தப் பையன் மூக்கு எப்படி இருக்கு பாரு. லேசா அந்த இடத்துல ஒரு வளைவு வந்தா அம்சமா இருக்கும் இல்லையா?
"ஆகா..பாக்கவே இப்ப முகம் நல்லா இருக்கே,"என்றான் அன்பு.
"இன்னும் காது, தலை முடி இதெல்லாம் சரி செய்ய வேண்டும். அந்த
தலைமுடி அப்படி வரக்கூடாது. நீ வகிடு எடுத்து தலை சீவி வருவாயே..
ம்ம்..அப்படித்தான்," ஓவியம் அன்புவுக்கு தனியாக வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தது.
"இப்ப எல்லாமே நல்லா வந்துருக்கு. இன்னைக்கு வாத்தியார் என்னோட
முகம் நல்லா வந்திருக்குன்னு சொல்லப்போறார்,பாரேன்,"என்றான் அன்பு.
"வாய்...பாரு...உதடு...அத ஒரு சின்ன கோடு போட்டு பிரி பாக்கலாம். இன்னும்
கொஞ்சம் வாய் நல்லா வந்துரும்," என்றது ஓவியம்.
"ஆமா..இல்ல...இப்பப் பாரு...சரியா வந்துருச்சு. உதடு அழகா
வந்துருக்கு. இல்லையா?" என்றான் அன்பு.
"எனக்கு இன்னும் திருப்தியாகலை. ஆனாலும் பரவாயில்லை.
இந்த முகம் அழகா..ஓரளவு இருக்கு. அழகா இல்லைன்னு சொல்லமுடியாது,"
என்று முகம் சொல்லியது.
"இந்த அளவுக்கு முகம் நல்லா வந்ததுக்கு நீங்கதான் காரணம். நீங்க
சொல்லச் சொல்லத்தான் நான் திருத்தி வரைந்து இந்த அளவுக்கு
வந்துருக்கு. ரெம்ப நன்றி, சார்"என்றான் அன்பு.
"நான் என்ன செய்தேன். எல்லாம் நீ தானே வரைந்தாய். உன் முயற்சிதான்
அவ்வளவும்;உனக்கு ஆர்வம் அதிகமானதால் சிரத்தையோடு வரைந்தாய்.
இதில் என் பங்கு ஒன்றுமே இல்லை. உன் முயற்சிக்கும் பயிற்சிக்கும்
கிடைத்ததுதான் இந்த முகம்,"என்றது ஓவிய முகம்.
"என்ன இருந்தாலும் ஓவிய ஆசிரியராக இருந்து எனக்குச் சொல்லிக்கொடுத்ததற்கு நன்றி," என்றான்.
மணியடித்தது.
எங்கே வரைந்ததெல்லாம் கொண்டாங்க; ஆசிரியர் சத்தமாகச் சொல்ல
எல்லாம் வரிசையில் போய் கொடுத்தனர்.
"இன்றைக்கு அருமையா வரைஞ்சது யார் தெரியுமா?"ஆசிரியர்
மாணவர்களை நோக்கிக் கேட்டார்.
பின் அவரே சொன்னார். இன்றைக்கு அழகான முகத்தை
வரைந்தது நம் அன்புதான்!"என்றார். அன்பு வரைந்த படத்தை
அனைவருக்கும் காட்டினார். அன்புவுக்கு பெருமையாக இருந்தது.
இரவு, அந்த முகம் படத்தை அவனுடைய மேசையின் மீது வைத்து
நோட்டை அதன் மேல் வைத்துவிட்டு அப்பாவிடம் காலையில்
காட்டவேண்டும் என்று நினைத்துக்கொண்டே போய் படுத்துவிட்டான்.
காலையில் எழுந்ததும், முதல் வேலையாக மேசை மீது போய்
பார்த்தான். அங்கே எதுவும் இல்லை. யார் எடுத்திருப்பார்கள்?
பையைத் திறந்து பார்த்தான். அந்த நோட்டில் முகம்
பாதி மட்டும் வரைந்த தாள் மட்டுமே இருந்தது. முழுவதுமாக
வரைந்த "முகம்" ஓவியம் எங்கே?
ஓவியம் பேசியதெல்லாம் கனவில்தானா? யோசித்துப்பார்த்தான்.
ஓவியம் என்ன சொன்னது?
நான் ஒன்றுமே செய்யவில்லை;செய்ததெல்லாம் நீதான். உன் விடா
முயற்சியும், பயிற்சியும்தான் என்று தானே சொல்லியது. ஆம்! அதுதான்
சரி.
முன்பெல்லாம் எதையாவது வரைய எண்ணி வரைவேன்; சரியா வரலைன்னா
அப்படியே விட்டுவிடுவேன். ஆனால் சரியாக வரும் வரை முயற்சி செய்து
திரும்பத் திரும்ப பயிற்சி செய்யவில்லை. அதனால்தான் படங்கள் வரையும்
முயற்சியில் வெற்றிபெறவில்லை. இப்படியெல்லாம் சிந்தித்தவன் ஒரு
முடிவுக்கு வந்தான்.
அந்த வெள்ளைத்தாளை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தான். முக வட்டத்தை
வரைந்தான். சரியாக வரவில்லை. மீண்டும் முயற்சி செய்தான். சின்னச் சின்ன
மாற்றங்கள் செய்து சரிபார்த்தான். சரியில்லையென்று அழித்தான். போட்டான்.
திருத்தினான். ஒவ்வொன்றுக்கும் தனிக் கவனம் செலுத்தினான். முகம்
வந்துவிட்டதே! மகிழ்ச்சியால் துள்ளினான்.
அதன் பிறகு எப்போது ஓவியம் வரைய வேண்டும் என்றாலும் அன்புவிடம்
ஒரு மாற்றம் காணப்பட்டது. ஏனோதானோவென்று எதையும் வரைவதில்லை.
அது சரியாக இருக்கிறது என்கிற வரை பயிற்சி செய்வான்;விடாமுயற்சியோடு
அழகுபடுத்துவான். திருப்தி பெறும்வரை கவனம் பிசகாமல் அக்கறையோடு,
ஆர்வத்தோடு ஒன்றிவிடுவான். ஒருநாள் நிச்சயம் அன்பு மிகப்பெரிய ஓவியனாக
வருவான்!
No comments:
Post a Comment