<>"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்..! "<>
மணி வகுப்பில், முதல் மாணவன். பாடத்தில்
மட்டுமல்ல; பேச்சு, கட்டுரை, விளையாட்டு
எல்லாத்துலயும் முதல் மாணவன்.
பாராட்டும், பரிசுகளும் மணியைத் தேடி வந்தன. மணி
வகுப்பில் படிக்கும் சக மாணவனான மதிவாணனுக்கு
படிப்பதில் நாட்டமில்லாமல் விளையாட்டிலேயே
பொழுதைப் போக்குவான்.
ஆனாலும் மணி பரிசோ, பாராட்டோ பெறும்போது
மதிக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும். அவனை
எதிலாவது வீழ்த்திக் காட்டிட சந்தர்ப்பம் வாய்க்காதா
என்று காத்திருந்தான்.
அது நேர்வழியில்லாமல் குறுக்குவழியாக இருந்தது.
பாடங்களில் மணியை விட அதிக மார்க் வாங்க
வேண்டும் என்று எண்ணாமல், மணிக்கு குறைவான
மார்க் கிடைக்க என்ன செய்வது என்றுதான் சிந்திப்பான்
மதி.
மதியோ வசதியான வீட்டுப் பையன். மணிக்கு அம்மா
கிடையாது. அப்பா மட்டும்தான். பல நேரங்களில் சாப்பிட
காலையில் ஒன்றுமிருக்காது. எப்படியிருந்தாலும்,
எதையும் வெளிக்காட்டாமல் படிப்பில் மட்டுமே
தன் முழுக் கவனத்தையும் செலுத்தினான்.
அன்று பள்ளிக்கு கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி
நாள்! மணியின் அப்பா, யாரிடமாவது கைமாத்தா பணம்
வாங்கீட்டு வர்றேன்னு போனவரைக் காணாமல் மணி
தவித்துக் கொண்டிருந்தான். பள்ளிக்கு வேறு நேரம் ஆகிக்
கொண்டிருந்தது. ஒருவழியா வந்து பணத்தைக் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக பள்ளியை
நோக்கி போய்க்கொண்டிருந்தான். திடீர் என்று பின்பக்கம் எதோ
வந்து மோத மணி தலைகுப்புற வீழ்ந்தான்.
அவன் புத்தகப் பை ஒரு பக்கமும் இவன் ஒரு பக்கமுமாக
விழுந்து கிடக்க, " ஸாரிடா... என்றவாறு மதிவாணன் வந்து
மணியைத் தூக்கிவிட்டான். மதி வேண்டுமென்றே சைக்கிளை
அவன் மீது மோதி விட்டு தெரியாமல் நடந்தது போல
மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.
மணிக்குத்தான் கை, கால், நெற்றியில் காயம் பட்டு ரத்தம் கசிந்து
கொண்டிருந்தது. சிதறிக்கிடந்த புத்தகங்களையும் நோட்டுக்களையும்
எடுத்து பைக்குள் திணித்துக் கொண்டு பள்ளிக்கு நேரமாச்சே என்ற
உணர்வு உந்தித் தள்ள ஓடினான்.
நல்லவேளையாக ஆசிரியர் வகுப்பிற்கு வரும் முன் அவன் இடத்தில்
போய்அமர்ந்து விட்டான். வகுப்பாசிரியர் வந்து வருகைப் பதிவேடு சரி
பார்த்ததும் முதல் கேள்வியாக, என்ன மணி பணம் கொண்டு வந்தியா ?
என்றுதான் கேட்டார்.
"கொண்டுவந்திருக்கிறேன்" அய்யா, என்று சொல்லிக்கொண்டே சட்டைப்
பையில் கையை விட்டவன் தேள் கொட்டியது போல் துடித்துப் போனான்.
பையில் பணம் இல்லை.
தேம்பித்தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். ஆசிரியர் அவனை சமாதானப்
படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது.
மணிக்காக ஆசிரியரே கட்டணத்தையும் செலுத்திவிட்டார்.
விழுந்த இடத்தில் பணம் பையிலிருந்து விழுந்திருக்குமோ
என்று மணி நினைத்து அங்கெல்லாம் போய் தேடிப் பார்த்தான்.
ஆனால் மதிவாணன் மட்டும் தனக்குள் சிரித்துக்கொண்டிருந்தான்.
மணி மாலையில் வீட்டில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அவன் அப்பாவும் வந்துவிட்டார்.
மணி காலையில் பணம் தொலைந்து போனதைச் சொல்லி
அழுதான். அந்தப்பணம் அப்படி போகணும்னு இருக்குறப்போ
நீ என்ன செய்ய முடியும் என்று சொல்லி அவனைத் தேற்றினார்.
சரி, நீ முகத்தைக் கழுவீட்டு கடைக்குப் போய் இதுல எழுதியிருக்
கிறதெல்லாம் வாங்கீட்டு வா என்று அவனை கடைக்கு அனுப்பினார்.
கடைவீதிக்கு வந்த மணி ஒரு இடத்தில் கூட்டமாக மக்கள் கூடி
நிற்பதையும், " இது யார் பெத்த பிள்ளையோ, அப்டீன்னு யாரோ
சொல்வதும் காதில் விழுந்தது. கூட்டத்தை விலக்கிப் போய் மணி
பார்த்தான். அங்கே தலையில் அடிபட்டு ரத்தம் வந்துகொண்டிருக்க
மதிவாணன் மெல்ல முனங்கிக் கொண்டிருந்தான்.
" ஐயோ ! மதி நீயா? என்று கேட்டவன், அருகே நின்ற சைக்கிள் ரிக்சாக்காரரை
கூப்பிட்டு, இவன் என்னோட படிக்கிறவன் கொஞ்சம் உதவி பண்ணுங்க.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக... " என்றான்.
" அட நீவேற ! அடிச்சுத் தள்ளீட்டு நிக்காம எவனோ போயிட்டான். போலீஸ்
கேஸை நான் தொடமாட்டேம்பா," என்றான் ரிக்சாக்காரன்.
" ஐயா, சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா காப்பாத்தீரலாம்.
ஒங்களுக்கு ரிக்சா வாடகைய நானே கொடுத்துர்றேன் என்று சொல்ல
அங்கிருந்தவர்கள் சிலர் மணிக்கு ஆதரவாகப் பேச அருகிலிருந்த
மருத்துவமனையில் கொண்டு போய் மதியைச் சேர்த்தான்.
தீவிர மருத்துவ சிகிச்சைப் பகுதியில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் ஒருவர், " தம்பி, சரியான சமயத்துல
கொண்டு வந்து சேர்த்தாய். இன்னும் ஒரு ரெண்டு மணி நேரத்துல கண்
முழிப்பான். நீ அதற்குள்ள அவங்க வீட்டுக்குத் தகவல் சொல்லி வரச்
சொல்லுன்னார்.
மதிவாணன் அப்பாவும், அம்மாவும் அரக்கப் பரக்க வந்தார்கள். அப்போது
தான் மதி கண்ணைத் திறந்து பார்த்தான்.
அவன் தலையிலிருந்த கட்டைப் பார்த்து அவனின் அம்மா,
மதீன்னு கத்தி அழ ஆரம்பிச்சுட்டார். அங்கிருந்த மருத்துவரிடம் மதியின்
அப்பா, எப்படியோ மகனை காப்பாத்தீட்டீங்க.
ஒங்களுக்கு கோடி நன்றிங்க, " அப்டீன்னார்.
"இங்க கொண்டுவந்து சரியான சமயத்துல சேர்த்த அந்தப் பையனுக்கு
நன்றி சொல்லுங்க முதல்ல அப்டீன்னு மணியை நோக்கி கையைக்
காட்டினார், மருத்துவர்.
அப்போதுதான், மதி உட்பட எல்லோருக்கும் விஷயம் புரிந்தது.
தம்பி, நீ மகராசனா இருக்கணும்ப்பா, என்று மதியின் அப்பாவும்
அம்மாவும் மணிக்கு நன்றி சொன்னாங்க.
மணி , என்னங்க மதிகூடப் படிக்கிறேன், இதக்கூட நான் செய்யலையின்னா
நான் படிச்சு என்ன புண்ணியம்," என்றான்.
மதியின் கண்களிலிருந்து சரம்,சரமாய் கண்ணீர் வடிந்தது.
மணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு நீ என்னை மன்னிச்சுரு," என்றான் மதி.
"மன்னிப்பா? எதுக்கு நான் ஒன்னை மன்னிக்கணும்? " என்றான் மணி.
" நான் எவ்வளவோ கெடுதல் ஒனக்குப் பண்ணீருக்கேன். இன்னைக்கு
காலையில கூட உன்னை வேணும்னே சைக்கிள்ல மோதுனேன்.
உன் பையிலிருந்து கீழ விழுந்த பணத்தைக் கூட நாந்தான் எடுத்தேன்.
ஆனா, நீ என்னை இப்ப சாவுல இருந்து காப்பாத்தீருக்க. என்னை மன்னிச்சு
ஒன்னோட நண்பனா ஏத்துப்பியா? என்று கேட்டு மேலும் அழுதான் மதி.
" அட, பைத்தியம் ! நீ எப்பவும் என் நண்பன்தான் ! நீ எப்ப தப்புன்னு
உணர்ந்திட்டியோ அப்பறம் என்ன? நீ இப்ப அழக் கூடாது.
எங்க சிரி பாக்கலாம்," என்றான் மணி.
மதிவாணனின் அப்பா, நாளைக்குக் காலையில் மணிக்கு ஒரு
புது சைக்கிள் வாங்கிக் கொடுக்கப் போறேன், " அப்டீன்னார்.
மதிவாணனின் அம்மா, 'எனக்கு இன்னையிலிருந்து ரெண்டு
மகன்கள் என்று சொல்லி மணியைக்கட்டி அணைத்துக்கொண்டார்.
மணிக்கு அந்தத் தாயின் அரவணைப்பில் தன் தாயைக் காணும்
சுகத்தில் மூழ்கிப் போனான்.
கதை தரும் நீதி : - யாருக்கும் தீங்கு விளைவிக்க மனதால் கூட
எண்ணுதல் கூடாது. ஒருவருக்கு காலையில் தீங்கு செய்தால்
மாலையில் அவருக்கே தீமை தேடிவரும் ! எனவே நமக்குத் தீங்கு
செய்பவர்களுக்குக்கூட நாம் தீங்கு செய்யலாகாது !
No comments:
Post a Comment