Saturday, February 4, 2012

<<>>முயல் கறி...!<<>>

                                     <<>>முயல் கறி...!<<>>

தமிழண்ணா, அமெரிக்கா.

ரு காட்டில் முயல் குடும்பம் வாழ்ந்து வந்தது. முயல் அப்பா, அம்மாவுக்கு அன்று ரெம்ப மகிழ்ச்சியான நாள்! காரணம், முயல் அம்மாவுக்கு இரண்டு முயல் குட்டிகள் பிறந்த சந்தோசம்!

முயல் குட்டிகள் கொழுக் மொழுக்கென்று பார்க்க அழகாக ருந்தது. சீமா, பூமா என்று இரண்டு முயல் குட்டிகளுக்கும் பெயர் வைத்து, அக்கம் பக்கம் உள்ள உறவு முயல்களைஎல்லாம் அழைத்து மெகா காரட் விருந்து வைத்துக் கொண்டாடியது, முயல் அப்பா,அம்மா.

சீமாவும் பூமாவும் பக்கத்து காரட் தோட்டத்தில் விளையாடுவதென்றால் ஒரே சந்தோசம். ஆனால், அப்பா, அம்மா முயல்கள் அப்படி அதிக நேரம் விளையாட அனுமதிப்பதில்லை.

ஆட்கள் நடமாட்டம் அறிந்து குட்டி முயல்களுக்கு வேகமாக ஓடி வராமல் ஆபத்தில்சிக்கிக்கொண்டால் என்னசெய்வது என்ற கவலையால் அனுமதிப்பதில்லை.அப்பா,அம்மா உணவு தேடச் சொல்லும்போது சீமவையும் பூமாவையும் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் அவர்கள் தலை மறைந்ததும்சீமாவும் பூமாவும் காரட் தோட்டத்துக்கு விளையாட ஓடிவிடுவார்கள்.

இப்படி ஒருநாள் சீமா, பூமா முயல் குட்டிகள் விளையாடச் சென்றபோது அந்தத் தோட்ட விவசாயி கவனித்து பிடித்து விட்டார். அப்போது தந்தை முயலும், அம்மா முயலும் அங்கே வந்து சேர்ந்தன. அப்பா முயல் விவசாயியிடம் வந்து, எங்க குட்டிகள் ரெண்டையும் விட்டுவிடுங்கள் என்றுகெஞ்சிக் கேட்டது.

விவசாயியோ, ரெண்டு முயல் குட்டியையும் கொண்டு போய் முயல் கறி செஞ்சு சாப்பிட ஆசைப்பட்டுத்தான் பிடிச்சு இருந்தார். எனவே விவசாயி ரெண்டு குட்டிகளையும் விட்டுவிடுகிறேன். அதற்குப் பதிலாக நான் உன்னைப் பிடிச்சுக்கிட்டுபோக சம்மதம் சொன்னா விட்டுவிடுகிறேன் என்றார். சரி, என்று அப்பா முயல் சொல்லஅப்பா முயலைப் பிடித்துக்கொண்டு குட்டி முயல்களை கீழே விட்டுவிட்டார்.

உடனே அம்மா முயல் வந்து விவசாயியிடம், இந்தக் குட்டிகள் அப்பா இல்லாம தூங்காது. என்னைப் பிடிச்சுக்கிட்டு அவரை விட்டுவிடுங்கள் என்று அம்மா முயல் கெஞ்சியது. விவசாயியும் மனம் இரங்கி அப்பா முயலை விட்டுவிட்டு அம்மா முயலைப் பிடித்துக் கொண்டார்.

இப்போது அப்பா முயலும், குட்டி முயல்களும் விவசாயி முன்னால் வந்து, எங்க அம்மாவை நீங்க பிடிச்சுட்டுப் போனா எங்களுக்கு அம்மா இல்லாம கஷ்டமா இருக்கும். அதனால எங்க எல்லாரையுமே நீங்க கொண்டு போயிருங்க என்று சொல்லி கண்ணீர் வடித்தது குட்டிகள். அப்பா முயலும் என்னோட குட்டி சொல்றதுதான் சரி. நாங்களும் வர்றோம் என்று சொன்னது.

முயல் குட்டிகளின் கண்ணீரும், குட்டிகள் மீது பெரிய முயல்களுக்கும் உள்ள அன்பையும் கண்டு விவசாயி திகைத்துப் போனார்.

" சே! என்ன காரியம் பண்ண இருந்தோம். சாப்பிடும்வரைதான் ருசியான சமாச்சாரம் நமக்கு. ஆனால் முயல்களுக்கோ தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை நிரந்தரமாக இழந்து தவிக்கும் உணர்வு எப்போதும் ஏற்பட்டுவிடுமே. விவசாயிமனம் மாறினார். அம்மா முயலை கீழே இறக்கி விட்டார்.

இனிமேல் இது போன்று உயிர்களைக்கொன்று புசிக்கும் வழக்கம்
இன்றோடு சரி என்றும் முடிவு செய்துகொண்டார். முயல்கள் எல்லாம் தங்கள் கைகளைக் கூப்பி விவசாயிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது.

முயல் குடும்பம் சந்தோசமாக வீட்டுக்குத் திரும்பியது. சீமாவும் பூமாவும் அப்பா, அம்மா பேச்சைக் கேட்காமல் போய்த்தானே வம்பில் மாட்டிக்கொண்டோம். இனிமேல் அப்பா, அம்மா சொல்வதைத் தட்டாமல் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தது. அப்பா,அம்மா விடம் சீமாவும் பூமாவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.

கதை சொல்லும் நீதி :- மாணவத் தம்பி, தங்கைகளே இந்த முயல் குட்டி கதையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன? அப்பா, அம்மா என்பவர்கள் உங்களைப்போல வாழ்ந்து பெரியவர்கள் ஆனவர்கள். அவர்களுக்கு எது நல்லது? எது கெட்டது என்று தெரியும்.

அவர்கள் சொல்படி கேட்டு நடந்தால் எந்தப் பிரச்னையும் நமக்கு வராது என்பதைத் தெரிந்து கொண்டீர்களா? பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் பெற்றோர் எப்படித் துடித்துப் போவர்கள்? நல்ல பிள்ளைகள்தான் நல்ல மனிதர்களாக முடியும்.

இது மட்டுமா? அந்த விவசாயியை அசைவம் சாப்பிடுவதிலிருந்தே மாற்றியமைத்தது எது? என்பதையும் சிந்தியுங்கள்!

No comments:

Post a Comment